வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த...


காட்டுமரம் நான்..


எல்லா மரங்களும் 

எதாவது ஒரு கனி கொடுக்க , 


எதுக்கும் உதவாத முள்மரம் நான்...


தாயும் நல்லவள்... 


தகப்பனும் நல்லவன்... 


தறிகெட்டு போனதென்னவோ நான்...


படிப்பு வரவில்லை...


படித்தாலும் ஏறவில்லை...


இரண்டு மைல் நடந்து

பள்ளிக்கு போவேன்...


பெற்றவரிடம் துப்பிப்போக ...


எல்லாம் தலையெழுத்தென்று 

எட்டி மிதிப்பான்...


பத்துவயதில் திருட்டு... 


பனிரெண்டில் பீடி... 


பதிமூன்றில் சாராயம்...


பதினெட்டில் அடிதடி...


இருபதுக்குள் எத்தனையோ...


எட்டாவது பெயிலுக்கு...


ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்...


மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... 


நூறு தருவார்கள்... 


வாங்கும் பணத்துக்கு...


குடியும் கூத்தியாரும் என...


எவன் சொல்லியும் திருந்தாமல்... 


எச்சிப்பிழைப்பு பிழைக்க ...


கைமீறிப்போனதென்று...


கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர்..! 


தேசிக்கு காசுவேணும் ...


வருபவள் ஓசிதானே...


மூக்குமுட்ட தின்னவும்... 


முந்தானை விரிக்கவும்... 


மூன்று பவுனுடன் ...


விவரம் தெரியாத ஒருத்தி...


விளக்கேற்ற வீடுவந்தாள்...


வயிற்றில் பசித்தாலும்... 


வயிற்றுக்கு கீழ் பசித்தாலும்... 


வக்கனையாய் பறிமாறினாள்...


தின்னு கொழுத்தேனே தவிர...


மருந்துக்கும் திருந்தவில்லை...


மூன்று பவுன்போட...


முட்டாப்பயலா நான்...


இன்னும் ஐந்து வேண்டுமென்று ...


இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...


கறவைமாட்டை சந்தைக்கு அனுப்பி ...


கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்... 


சொந்தம் விட்டுப்போகாமல்... 


மாமனாரான மாமன்...!


பார்த்து வாரமானதால்... 


பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,


தள்ளிப்போனதென்று தள்ளிவிட்டாள்...


சிறுக்கிமவ 

இருக்கும் சனி...


போதாதென்று 

இன்னொரு சனியா..? 


மசக்கை என்று சொல்லி...


மணிக்கொருமுறை வாந்தி.., 


வயிற்றை காரணம்காட்டி...


வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,


சாராயத்தின் வீரியத்தில்... 


சண்டையிட்டு வெளியே அனுப்ப.., 


தெருவில் பார்த்தவரெல்லாம் 

சாபம் விட்டு... 


போவார்கள்_கடைசி மூன்று மாதம்...


அப்பன்வீட்டுக்கு அவள் போக.., 

கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...


வாசனையாய் வந்துபோனாள்..,


தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...


தகவல் சொல்லியனுப்ப.., 


ரெண்டு நாள் கழித்து...


கடமைக்கு எட்டிப்பார்த்தேன்... 


கருகருவென 

என் நிறத்திலே... 


பொட்டபுள்ள..!


எவன் கேட்டான் இந்த மூதேவியை... 


கள்ளிப்பால் கொடுப்பாயோ ...


கழுத்தை திருப்புவாயோ... 


ஒத்தையாக வருவதானால் ...


ஒருவாரத்தில் வந்துவிடு 

என்றேன்...,


ஆறுமாதமாகியும் அவள்வரவில்லை...


அரசாங்க மானியம்

ஐயாயிரம்... 


கிடைக்குமென்று

கையெழுத்துக்காக...


பார்க்கப்போனேன் ...


கூலிவேலைக்கு போனவளை கூட்டிவரவேண்டி...


பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச்செல்ல...


ஆடி நின்ற ஊஞ்சலில்... 


அழுகுரல் கேட்டது..,


சகிக்க முடியாமல் 

எழுந்து ...


தூக்கினேன்_பெண்குழந்தை..!


அடையாளம் தெரியவில்லை ...


ஆனால் அதே கருப்பு...


கள்ளிப்பாலில் தப்பித்துவிட்டு...


கைகளில் சிக்கிக்கொண்டது.., 


வந்தகோபத்திற்கு...


வீசியெறியவே தோன்றியது... 


தூக்கிய நொடிமுதல்... 


சிரித்துக்கொண்டே இருந்தது,


என்னைப்போலவே...


கண்களில் மச்சம்,


என்னைப்போலவே

சப்பைமூக்கு,


என்னைப்போலவே

ஆணாக.., 


பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க ....


வேண்டியதில்லை...,


பல்லில்லா வாயில்... 


பெருவிரலை தின்கிறது,


கண்களை மட்டும்.., 


ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,


ஒரு கணம் விரல் எடுத்தால்... 


உதைத்துக்கொண்டு அழுகிறது, 


எட்டி விரல்பிடித்து...


தொண்டைவரை வைக்கிறது, 


தூரத்தில் வருவது கண்டு...


தூரமாய் வைத்துவிட்டேன்... 


கையெழுத்து வாங்கிக்கொண்டு... 


கடைசி பஸ்ஸுக்கு திரும்பிவிட்டேன், 


முன்சீட்டில் இருந்த குழந்தை...


மூக்கை எட்டிப்பிடிக்க 

நெருங்கியும்... 


விலகியும் நெடுநேரம்... 


விளையாடிக்கொண்டு இருந்தேன்! 


ஏனோ அன்றிரவு ...


தூக்கம் நெருங்கவில்லை,


கனவுகூட 

கருப்பாய் இருந்தது,


வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...


போட்ட கையெழுத்து பொருந்தவில்லை... 


என_இன்னொரு கையெழுத்துக்கு...


மீண்டும் சென்றேன், 


அதே கருப்பு, 

அதே சிரிப்பு, 


கண்ணில் மச்சம், 

சப்பை மூக்கு...


பல்லில்லா வாயில் 

பெருவிரல் தீனி...


ஒன்று மட்டும் புதிதாய் ...


எனக்கும் கூட 

சிரிக்க வருகிறது ...


கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...


எந்த குழந்தையும் இல்லை, 


வீடு நோக்கி நடந்தேன்,


பாதிவழியில் கறிவேப்பிலைகாரி...


கைப்பிடித்தாள் 

உதறிவிட்டு நடந்தேன்...


தூக்கம் இல்லை 

நெடுநேரம்... 


பெருவிரல் 

ஈரம் பட்டதால் ...


மென்மையாக இருந்தது ...


முகர்ந்து பார்த்தேன் ....


விடிந்தும் விடியாததுமாய்... 


காய்ச்சல் என்று சொல்லி...


ஊருக்கு வரச்சொன்னேன்,


பல்கூட விளக்காமல் ...


பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுவிட்டேன், 


பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி...


குழந்தையை கொடு என்றேன்,


பல்லில்லா வாயில் பெருவிரல்! 

இந்தமுறை பெருவிரலை தாண்டி... 


ஈரம் எங்கோ சென்றுகொண்டு இருந்தது...


தினமும் என் மீது படுத்துக்கொண்டு...


பொக்கை வாயில் கடிப்பாள், 


அழுக்கிலிருந்து 

அவளை காப்பாற்ற...


நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,


பான்பராக் வாசனைக்கு...


மூக்கை சொரிவாள் விட்டுவிட்டேன் ...


சிகரெட் ஒரு முறை..,


சுட்டுவிட்டது விட்டுவிட்டேன்...


சாராய வாசனைக்கு...


வாந்தியெடுத்தாள் விட்டுவிட்டேன், 


ஒரு வயதானது உறவுகளெல்லாம்... 


கூடி நின்று 

அத்தை சொல்லு..,


மாமா சொல்லு 

பாட்டி சொல்லு ...


அம்மா சொல்லு என்று...


சொல்லிக்கொண்டு இருந்தார்கள்... 


எனக்கும் ஆசையாக இருந்தது,


அப்பா சொல்லு 

என்று சொல்ல, 


முடியவில்லை ஏதோ என்னை தடுத்தது,


ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...


அவள் சொன்ன முதல் வார்த்தையே... 


அப்பாதான்! 


அவளுக்காக எல்லாவற்றையும்... 


விட்ட நான் அப்பா என்ற 


அந்த வார்த்தைக்காக...


உயிரைகூட விடலாம் என்று தோன்றியது, 


அவள் வாயில் இருந்து வந்த.., 


அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன், 


இந்த சாக்கடையை...


அன்பாலேயே கழுவினாள்...  


அம்மா சொல்லி திருந்தவில்லை, 


அப்பா சொல்லி திருந்தவில்லை ,


ஆசான் சொல்லி திருந்தவில்லை ,


நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை ,


நாடு சொல்லியும் திருந்தவில்லை, 


முழுதாய் மூன்று வார்த்தை பேசவராத ...


இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்.. 


வளர்ந்தாள்..,


நானும் மனிதனாக வளர்ந்தேன்... 


படித்தாள், 


என்னையும் படிப்பித்தாள்... 


திருமணம் செய்துவைத்தேன் ,


இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள், 


இரண்டு குழந்தைகளுமே...


பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள், 


நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் ,


என்னை மனிதனாக்க...


எனக்கே மகளாய் பிறந்த... 


அந்த தாய்க்காக காத்திருக்கிறது ...


இந்த_கடைசி_மூச்சு..! 


ஊரே ஒன்று கூடி..,


உயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,


எனக்குத்தெரியாதா என்ன,


யாருடைய பார்வைக்கப்புறம்...


பறக்கும் இந்த உயிரென்று?


வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்...


வாசலில் ஏதோ சலசலப்பு, 


நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்.., 


என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் ,


அது அவள்தான், 

மெல்ல சாய்ந்து ...


என் முகத்தை பார்க்கிறாள் ...


என்னைப்போலவே...


கண்களில் மச்சம்,

சப்பைமூக்கு, 

கருப்பு நிறம், 

நரைத்த தலைமுடி

தளர்ந்த கண்கள்,


என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு, 


அப்பா அப்பா என்று அழுகிறாள், 


அவள் எச்சில் 

என் பெருவிரலிட,


உடல் முழுவதும் ஈரம் பரவ...


ஒவ்வொரு புலனும் துடித்து அடங்குகிறது


கல்லும் கூட மகளின் கைப்பட்டால் சிலையாகும்!


Post a Comment

أحدث أقدم